சீன - இலங்கை தலைவர்கள் உரையாடல்; அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்

- சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் இணைந்து பயணிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்னுக்குமிடையில் (29) நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.  

இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாகவும் சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுக்க நேர்கின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில் தொடர்ந்தும் உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சீன ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, அண்மையில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக ஷீ ஜின் பின் ஜனாதிபதிக்கும் சீன அரசாங்கத்திற்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 6இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியதற்காகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.  

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த சீன ஜனாதிபதி, கொவிட் 19பாரிய சவாலாக அமைந்தாலும்கூட சீன- இலங்கை தொடர்புகளை புது பரிமாணத்துடன் மேம்படுத்துவதற்கு காரணமாகியதென்றும் குறிப்பிட்டார்.  

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பன இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பாரிய இரண்டு திட்டங்களாகும். அவற்றை உடனடியாக நிறைவு செய்வது எமது எதிர்பார்ப்பாகும். துறைமுக நகரம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்தக் கூடியதாகவும் தொழிலின்மைக்கு ஒரு தீர்வாகவும் அமைந்துள்ளது என்று சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.    இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக உதவி செய்ய தமது விருப்பத்தை தெரிவித்த சீன ஜனாதிபதி, கடந்த பல வருடங்களில் தனது நாட்டில் 90இலட்சம் பேரை வறுமை நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியுமாக இருந்ததென்றும் குறிப்பிட்டார்.  

சீனா – இலங்கை தொடர்புகளை உபாய ரீதியாக நன்மை பயக்கக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, இருநாட்டு மக்களுக்கிடையிலும் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.  

சீனா மக்கள் வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிய பரிமாற்று நிதி வசதிகளை பாராட்டிய ஜனாதிபதி, அது இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.

Wed, 03/31/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை