- நேற்று முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி நியமனம்
இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள இவருக்கான நியமன கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கையளித்தார்.
இதேவேளை, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தலைமையகத்திலுள்ள தனது அலுவகத்தில் இன்று (22) முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான ரியர் அட்மிரல் ருவன் பெரேரா 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி கெடெட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்துக் கொண்டுள்ளார்.
35 ஆண்டு கால சேவையைக் கொண்ட இவர் இலங்கை கடற்படையின் தென் பிராந்திய, வட பிராந்திய மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையககங்களின் கட்டளை தளபதியாகவும், பிரதி பிரதம அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் சிங்கபூர் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான கற்கை நெறிகளை நிறைவு செய்துள்ள இவர், ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கம் ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸாதிக் ஷிஹான்
from tkn