தமிழ் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசுமே மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது

-  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் தற்போது மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது. ஆனால் சிங்கள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இதே அரசாங்கம் மாகாண சபையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

இன்னும் பட்டிருப்புத் தொகுதியில் மின்சாரம் இல்லாத மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வகிபாகம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் போதாதுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (20) களுதாவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வந்த பாதைகளை மறந்து, கற்ற விடைங்களை மறந்து, மீண்டும் எமது இளைஞர்களை கூறாக்கி கிழக்கிலிருந்துதான் வடக்கிற்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை யாரும் உருவாக்கிவிட வேண்டாம். மண்ணைக் காக்க வேண்டும் என்று வெற்றுக் கோசங்கள் இட்ட தலைவர்களால் தான் கிழக்கு மண் அழிந்த​ன, கிழக்கில்தான் அதிக உயிர்கள் அழிக்கப்பட்டன.

பொத்துவிலிருந்து அங்கொரு காலும், இங்கொரு காலும் வைத்து சாணக்கியனும் சுமந்திரனும் 5நாட்களில் பொலிகண்டி போனார்களாம். நாங்கள் 15நாட்கள் உணவும் இல்லாமல் நடந்து யாழ்ப்பாணம் சென்று பல சண்டைகளைப் பிடித்து அதில் பல உயிர்களைக் காவு கொடுத்துவிட்டுத்தான் வந்துள்ளோம். அவ்வாறெனில் எவ்வாறு 5நாட்களில் அவர்கள் செல்வது.

சுமந்திரனுக்கு அவரது கட்சியில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு சாணக்கின் தம்பி உதவிசெய்கின்றார். அவ்வாறு நாங்கள் சென்றால் மீண்டும் நாங்கள் பின்னடைவைச் சந்தித்து விடுவோம் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது மாகாண சபையை நடத்த முடியாமலுள்ளது. அதிகாரத்தைத் தருவோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் தற்போது மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது. ஆனால் சிங்கள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இதே அரசாங்கம் மாகாண சபையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

 கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு ஏமாற்றியது என்பதை அவதானிக்க வேண்டும். இவ்வாறான தலைவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளர்வார்கள்? கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தியில் தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்டார்கள்.

எனவே எமது கட்சியின் பாச்சல் என்பது எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பாய்ச்சலாக இருக்க வேண்டும். அவ்வாறானவர்களைத்தான் மக்கள் மத்தியிலிருந்து தேர்தலில் களமிறக்க வேண்டும்.

அதற்குரிய உந்துதலை கட்சி வழங்க வேண்டும். எனவே மக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாங்கள்பட்ட வேதனைகளையும், கஸ்ட்டங்களையும், எமது மக்கள் அனுபவிக்கக்கூடாது. எனவே எமது மக்களை வாழ வைக்கக்கூடிய கட்சியாக எமது கட்சியை மாற்றியாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Mon, 03/22/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை