சிவசக்தி ஆனந்தனிடமும் பொலிசார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய பொலிஸ் பிரிவுகளின் பொலிசார் நேற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிவசக்தி ஆனந்தனின் வவுனியாவில் உள்ள அலுவலகத்திற்குச் காலையில் சென்ற வவுனியா பொலிசார் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் வினவியதோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் குறிப்பிட்டனர்.

இதன்போது, தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகளும் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை என்றும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்துள்ளார்.

அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் தான் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து பொலிசார் செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது 'மேலிடத்து உத்தரவு' என்று பொலிசார் பதிலளித்ததோடு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தொடர்ந்து ஒட்டிசுட்டான் பொலிசாரும், புதுக்குடியிருப்பு பொலிசாரும் சிவசக்தி ஆனந்தனிடத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

Wed, 03/03/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை