வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இன்று (14) அதிகாலை, யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக பட்டா வாகனத்தின் சாரதி வாகனத்தினை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தின் முன்புறமாக நின்ற வேளையில் கந்தளாயில் இருந்து நெல் ஏற்றி வந்த லொறியொன்று குறித்த பட்டா வாகன சாரதியையும் மோதி வாகனத்துடனும மோதியதில் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் ஏறாவூர் 02, காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதான, நான்கு பிள்ளைகளின் தந்தையான அஹமட் லெப்பை லாபீர் என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
(கல்குடா தினரகன் நிருபர் - எஸ்.எம்.எம். முர்ஷித்)
from tkn