- 166A பிரிவில் ஒரு சில வீதிகள் தனிமைப்படுத்தல்
- மாத்தளையிலும் சில இடங்கள் விடுவிப்பு
கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து கடந்த 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த காத்தான்குடியின் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று (09) விடுவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து காத்தான்குடி வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளதுடன் காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கொவிட் பரவல் அச்ச நிலைமை காரணமாக கடந்த டிசம்பர் 31ஆம் திகதி முதல் அன்று தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
பின்னர் கடந்த கடந்த ஜனவரி 21ஆம் திகதி, 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டு 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நான்கு வீதிகளை தவிர ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டன.
166ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள, சின்னத்தோனா வீதி, முஅத்தினார் லேன், கபூர் லேன், ரெலிகொம் வீதி, 1ம் குறுக்கு லேன், பௌசி மாவத்த ஆகிய வீதிகள் மாத்திரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகள் மற்றும் பள்ளிவாயல்களை சுகாதார நடைமுறைகளை பேணி திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின், இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராம அலுவலர் பிரிவிலுள்ள வரக்காமுற பிரதேசம் ஆகியனவும் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்)
from tkn