மாத்தளை நகர முதல்வரான தமிழர் சந்தனம் பிரகாஷிற்கு இராதா வாழ்த்து

மாத்தளை மாநகர சபையின் நீண்ட இடைவேளையின் பின்பு தமிழர் ஒருவர் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மாத்தளை வாழ் மக்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.எனவே புதிய முதல்வாரன சந்தனம் பிரகாஷ் அனைத்து மக்களையும் அரவணைத்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும். அவருக்கு மலையக மக்கள் முன்னணியின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசம் மலையகமாகும்.ஆனால் மாத்தளையை பொறுத்த அளவில் ஒரு தமிழர் நகர முதல்வராக வருவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.ஆனால் எங்களுடைய மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களானால் அந்த பதவியை தமிழர்களும் அலங்கரிக்க முடியும்.இதே நிலைமையே நுவரெலியா மாநகர சபையிலும் இருக்கின்றது.நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தாலும் நீண்ட காலமாக இங்கு தமிழர் ஒருவர் நகர முதல்வராக வர முடியாத நிலைமை இருக்கின்றது.

எனவே இவ்வாறான ஒரு நிலையில் தாங்கள் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருப்பது தமிழர்கள் அனைவருக்குமே பெருமைக்குரிய விடயமாகும்.

தாங்கள் இந்த பதவியை சரியான முறையில் பயன்படுத்தி அனைத்து தரப்பினரையும் சமமாக கருதி அவர்களுக்கு சேவை செய்ய முடியமாக இருந்தால் அடுத்து வருகின்ற தேர்தலில் நீங்கள் அதிக வாக்குகளை பெற்று மீண்டும் நகர முதல்வராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. உங்களுடைய பதவியை பயன்படுத்தி அனைத்து சமூகமும் ஒற்றுமையாகவும் ஒரே குடும்பமாகவும் வாழ்வதற்கான வேலைத்திட்டத்தை தாங்கள் முன்னெடுக்க வேண்டும்.எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவருக்கும் கட்சி அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவீர்கள் என எதிர்பார்ப்பதுடன் தங்களுக்கு மலையக மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

 

நுவரெலியா தினகரன் நிருபர்

 

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை