யாழ். நெல்லியடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் ஒன்று கோர விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை ( 27) நள்ளிரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பேணாட் கண்ணன் (வயது -40) ஸ்தலத்திலேயே பலியானார். அவருடன் வாகனத்தில் பயணித்த வவுனியாவைச் சேர்ந்த சிவலிங்கம் மதிவண்ணன் (வயது- 42) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கப்ரக வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் வங்கிக்கு அருகாமையில் உள்ள மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இதில் கப்ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ராஜிவனின் கட்டளைக்கு அமைய கரவெட்டி பிரதேச மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

கரவெட்டி தினகர் நிருபர்
 

Fri, 01/29/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை