கொவிட் 19 நடைமுறைகளை பேணாத திரையரங்குக்கு சீல்

பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறையினரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாது கொவிட் -19சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது இயங்கிய திரையரங்கே பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான குழுவினரால் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறைப் பகுதியில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் இனங்காணப்பட்டு அவர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய 25க்கும் மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கான பி.சி.ஆர் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திரையரங்கை பருத்தித்துறையில் திறக்க வேண்டாம் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைபெற்று பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியாலும் பொதுச் சுகாதார பரிசோதகராலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த அறிவுறுத்தலை மீறி, அங்கு சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் ஒன்றுகூட இடமளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே திரையரங்கு சீல் வைக்கட்டு மூடப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.

கரவெட்டி தினகரன், யாழ்.விசேட நிருபர்கள்

 

Tue, 01/19/2021 - 13:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை