வடக்கில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நேரில் வந்து ஆராய்வதாக வனஜீவராசிகள் அமைச்சர் உறுதி

வடக்கில் மீள்குடியேறிய மக்களின் காணி மற்றும் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரமளவில் நேரில் வந்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சீ.பி ரத்னாயக்க மேலும் கூறியதாவது,

2012 ஆம் ஆண்டின் பின்னர் வனங்களை வர்த்தமானியூடாக அறிவிக்கையில் ஜீ.பி. எஸ்.தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள அரச காணி மட்டுமே வர்த்தமானியில் இணைக்கப்படுகிறது.

வடக்கிலுள்ள மொத்த பிரதேசம் 08 இலட்சத்து 88,400 ஹெக்டயர்களாகும். வடக்கில் 3,92,164  ஹெக்டயர்களே வர்த்தமானி ஊடாக வனப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 44 வீதமான பகுதி இவ்வாறு வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார். இடையீட்டு கேள்வியொன்றை எழுப்பிய சார்ள்ஸ் நிர்மநாதன் எம்.பி,

40 வீத பகுதியை வன இலாகா தம்வசம் வைத்துள்ளது. 83/84 காலப்பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.அவர்கள் மீளக் குடியேறுகையில் 20-25 வருடங்களாக வளர்ந்த மரங்கள் இருக்கின்றன. இந்த இடங்களையும் ஜீ.பி.எஸ் மூலம் வர்த்தமானிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு தமது காணிகள் தொடர்பிலான ஆவணங்கள் உள்ளன.இது தொடர்பில் கவனம் செலுத்த முடியுமா? என்று வினவினார்.

இதற்கு தமிழில் பதில் வழங்கிய அமைச்சர் இது குறித்து ஆராய்ந்து பதில் அளிப்பதாக குறிப்பிட்டார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இடம்பெயர்ந்த பின்னர் மரம் வாழ்வாதாரத்திற்கு நிலம் இல்லை கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. மேய்ச்சல் நிலம் தொடர்பில் பிரச்சினை உள்ளது.வன இலாகா திணைக்களத்திலுள்ள மேய்ச்சல் நிலங்களைப் பெற வன இலாகா மறுக்கிறது. இது தொடர்பில் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முடிவு எடுத்தாலும் அதனை செயற்படுத்த மறுக்கப்படுகிறது என்றார் .

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

இது குறித்து ஆராய்ந்து அடுத்த வாரமளவில் அங்கு நேரில் வந்து ஆராய்ந்து ஆவன செய்வதாக கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை