கண்டி தேசிய வைத்திய சாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த கண் பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெனாண்டோ இன்று (04) தெரிவித்தார்.
கண் சிகிச்சைப் பிரிவின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், PCR பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஏனைய ஊழியர்கள் பெற்ற அறிக்கைகளினது முடிவுகளின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு, கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையின் தொண்டை, காது மற்றும் மூக்கு பிரிவின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாக அப்பிரிவின் கிளினிக் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் பணிப்பாளர் இரேஷா பெனாண்டோ கூறினார்.
மேலும் கண்டி, மருத்துவமனைக்கு அருகிலுள்ள போகம்பறை பிரதேசத்தில் இன்று (04) 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்ல பயண கட்டுப்பாடு விதிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் ஊழியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக போகம்பறை பஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
(எம்.ஏ. அமீனுல்லா)
from tkn