கிராம உத்தியோகத்தரின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இலுப்பைக்கடவை கிராம அலுவலரின் கொலையைக் கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக்  கோரியும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பணியாளர்கள் இன்று (06) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இலுப்பைக்கடவை கிராம அலுவலரான   எஸ். விஜியேந்திரன் (55)  என்பவர்,  கடந்த 3ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கள்ளியடி, ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பதாதைகளில் அரச சேவைக்கு சன்மானம் ஆறடிக் கிடங்கா?, கொலையாளி யார்? விசாரணையை துரிதப்படுத்துங்கள், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், கிராம அலுவலகர் விஜியேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், கொலை செய்யப்பட்ட கிராம அலுவலரின் மரணம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைகாரர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

(மன்னார் குறூப் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட், தலைமன்னார் விசேட நிருபர் வாஸ் கூஞ்ஞ)

Fri, 11/06/2020 - 15:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை