"கல்விக்கு எதுவும் தடையல்ல; வைத்தியராவதே இலக்கு"
வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின்படி, கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த முஹம்மது சமீர் முஹம்மது உஸாமா எனும் மாணவன் 158 புள்ளிகளை பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் பி. அப்துல் றவூப் தலைமையின் கீழ் கண்காணிக்கப்பட்ட விசேட கல்விப் பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்றதோடு, அதில் ஆசிரியர்களாக ஏ.எஸ்.எம். சாஹா, கே.எஸ். சிவராசா, ஆசிரியை ஏ. அஸ்மினா போன்றோர் சிறந்த வழிகாட்டல்களை வழங்கியிருந்தனர்.
தனது தாயை சிறுவயதில் இழந்த குறித்த மாணவன், கல்வியை தொடருவதற்காக தனது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலுள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
மூன்று சக்கர நாற்காலி ஊடாக தனது வளர்ப்புத் தாய் உடனும், முச்சக்கர இயந்திர மோட்டார் வண்டியின் உதவியுடன் தனியாகவும் வந்து தனது கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
சிறு வயது முதல் எழுந்து நடக்க முடியாத விசேட தேவையினை கொண்ட தனக்கு, ஊனமுற்றிருப்பதும் வறுமையும் கல்விக்கு ஒரு தடையல்ல என்றும் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியனாக வருவதே தனது இலட்சியம் என்றும் மாணவன் முஹம்மது உஸாமா தெரிவிக்கிறார்.
(முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம்.எஸ். அப்துல் ஹலீம்)
from tkn