ஆதரவு திரட்டி வெள்ளை மாளிகையின் ஆலோசகர் அரபு நாடுகளுக்கு விரைவு

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதற்கு ஆதரவைப் பெறுவதற்காக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் ஜரட் குஷ்னர் அரபு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்லாமிய நாடுகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டது என்று ஈரான் கடுமையாக விமர்சித்து இருந்தது. மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்தச் செயலை இஸ்லாமிய நாடுகள் மன்னிக்காது என்றும் ஈரான் தெரிவித்தது. துருக்கி மற்றும் பலஸ்தீனமும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முடிவை விமர்சித்துள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே ஏற்பட்ட இரு நாடுகள் நல்லுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஆதரவு பெற சவூதி மற்றும் பஹ்ரைனுக்கு வெள்ளை மாளிகையின் ஆலோசகர் குஷ்னர் பயணித்துள்ளார்.

அவர் கட்டாருக்கும் பயணிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றி ஏனைய அரபு நாடுகளும் இஸ்ரேலை விரைவில் அங்கீகரிக்கும் என்று குஷ்னர் முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் அடுத்த நிகழ்வு எப்போது என்று செய்தியாளர்கள் குஷ்னரிடம் கேட்டபோது, “சில மாதங்களில் அதனை எதிர்பார்க்கலாம்” என்றார்.

சவூதி இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தாத போதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தூதுவர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் பயணித்த இஸ்ரேலிய வர்த்தக விமானம் சவூதி தனது வான் பகுதியை பயன்படுத்த முதல் முறை அனுமதி அளித்திருந்தது.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை