கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகன் தொண்டமான் மூலமாக இன்றும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு அவரின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (11) நடைபெற்ற அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிநிதியாக முதற் தடவையாக தான் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த போது அமரர் ஆறுமுகன் தொண்டமானும் பாராளுமன்ற பிரவேசத்தினை மேற்கொண்டார் என்று சுட்டிக் காட்டியதுடன், அன்று முதல் இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில் கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து மலையக மக்களுக்கு மாத்திரமன்றி இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும் .கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு பசுக்களின் மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன் உரையாடியபோது, 'உங்களுக்குத் தேவையான பசுக்களை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்' என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார்.' என்று அமரர் ஆறுமுகம் தொண்டமான் தன்னுடன் பகிர்ந்த நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுதாப பிரேரணையின் போது பாராளுமன்றில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை