இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய இலச்சினை அறிமுகம்

இலங்கையில் உள்ள விளையாட்டு சங்கங்களில் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட ஒரேயொரு சங்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இலங்கை மெய்வல்லுநர் சங்கம், ‘ஸ்ரீலங்கா அத்லடிக்ஸ்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் விசேட பொதுச்சபை கூட்டத்தின் போதே இந்த அறிவிப்பு வெளியாகியது.

1922ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்ற இலங்கை மெய்வல்லுநர் சங்கம், எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா அத்லடிக்ஸ் என்ற பெயருடனும், அதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய இலச்சினையையும் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தொடர்ந்து செயற்படுவார் என இந்த விசேட பொதுச்சபை கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அட்டவணையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மெய்வல்லுநர் குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான திறன்காண் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் அக்டோபர் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத்தொடர்ந்து 16, 18, 20வயதுக்குட்பட்டவர்களுக்கான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் நவம்பர் மாதம் 21, 22மற்றும் 28, 29ஆம் ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன.

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பங்களை ஒக்டோபர் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிரேஷ்ட வீரர்களுக்காக நடத்தப்படும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் முதல்தடவையாக தேசிய திறன்காண் போட்டிகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மெய்வல்லுனர்கள் மாத்திரம் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்தத் தொடரானது 2021 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/02/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை