த்ரில் வெற்றியுடன் ரி-20 தொடரினை சமன் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ரி 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அதேநேரம், இந்த ரி 20 தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டிருக்க குறித்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை (1) மன்செஸ்டர் நகரில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான ரி-20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது.

அடுத்து, போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கியிருந்தார். தொடர்ந்து, ரி-20 தொடரின் இரண்டாவது போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த பாகிஸ்தான் அணி, தொடரினை சமநிலைப்படுத்தும் நோக்குடன் தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியது.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பவீரர்களாக வந்த அதன் தலைவர் பாபர் அசாம் மற்றும் பக்கார் சமான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை தராது போனாலும், அறிமுக வீரராக களமிறங்கிய ஹைதர் அலி மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தமது சமார்த்தியமான ஆட்டம் மூலம் ஓட்டங்களை சேர்த்தனர்.

இதில் மொஹமட் ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் தான் பெற்றுக்கொண்ட 13ஆவது அரைச்சதத்தோடு 52 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் பெற்றார். அதோடு, ஹபீஸ் இந்த தொடரில் இரண்டாவது அரைச்சதத்தினை பதிவு செய்தார். மறுமுனையில், தனது கன்னி சர்வதேச போட்டியில் அரைச்சதம் பெற்ற ஹைதர் அலி 33 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் ஜோர்டன் தனது வேகத்தின் மூலம் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டொம் கர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 191 ஓட்டங்களை அடைய இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிலுக்கு துடுப்பாடியது. பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கிற்கான போராட்டம் ஒன்றை காண்பித்த போதும் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து வெறும் 5 ஓட்டங்களால் போட்டியில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய மொயின் அலி 33 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம், டொம் பேன்டன் 31 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக அற்புதமான முறையில் செயற்பட்ட வஹாப் ரியாஸ் மற்றும் சஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்ய, இமாத் வஸீம் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் அணியுடனான ரி 20 தொடரினை நிறைவு செய்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்ததாக தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) தொடக்கம் விளையாடுகின்றது.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை