பலஸ்தீனர் கத்திக்குத்து: இஸ்ரேலிய மதகுரு பலி

இஸ்ரேல் நகரான பெடா டிக்வாவில் யூதா மதகுருவான ரப்பி ஒருவர் பலஸ்தீன ஆடவர் ஒருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

நான்கு குழந்தைகளின் தந்தையான 39 வயது ஷாய் ஒஹயோன் கடந்த புதன்கிழமை தாம் கற்ற சமயக் கல்லூரி ஒன்றில் இருந்து திரும்பி பஸ் வண்டியில் வந்திறங்கியபோது வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அங்கிருந்தவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் நகருக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 46 வயது ஆடவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக கருதி விசாரணைகளை நடத்தி வருவதாக புலன்விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2015 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் காரை மோதவிட்டு நடத்தும் தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பிரிவில் தாக்குதல்தாரிகள் எனக் கூறி இஸ்ரேலால் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை