பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க சுகாதார வழிகாட்டல்

ஆராய்வதற்கு விசேட குழு விஜயம்

பொதுத் தேர்தலின் பின்னர் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு (22) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இந்த வைத்தியர்கள் குழு பாராளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை பார்வையிட்டனர். இதனைவிடவும் பாராளுமன்றப் பணியாளர்களின் உணவுக் கூடம், விசேட விருந்தினர்களின் உணவுக் கூடம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்திலுள்ள முக்கிய இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் பின்னர் மருத்துவர் குழுவுக்கும், பாராளுமன்ற அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்பொழுது பாராளுமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காணப்படும் நடைமுறை சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை