அட்டாளைச்சேனை பஸ்மீர் தேசிய மட்ட நடுவராக பதவி உயர்வு

அட்டாளைச்சேனை நடுவர் சங்க அங்கத்தவரும், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியருமான ஜே.பஸ்மீர், இலங்கை தேசிய கிரிக்கெட்  சபையினால் நடுவர் மட்டம்- 04 தரத்திற்கு ஜூலை 01ம் திகதி முதல் பதவி உயர்த்தப்பட்டு, தேசிய மட்ட நடுவராக நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பஸ்மீர், இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் சங்கத் தலைவர் தீபால் மதுரப்பெருமவினால் ஒப்பமிடப்பட்ட தேசிய நடுவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

சர்வதேச நடுவர்களான குமார் தர்மசேன, ரீ.எச்.விஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டு நடுவர் பஸ்மீருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தனர். இலங்கை தேசிய கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட மட்டம்- 04 பரீட்சை மற்றும் பல்வேறு போட்டிகளில் பஸ்மீர் கலந்துகொண்டு சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும், கிழக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம் நிலையும், தேசிய மட்டத்தில் 20 வது நிலையும் பஸ்மீர் பெற்று இம்மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் உடற்கல்வி டிப்ளோமாதாரியுமான பஸ்மீர் சிறந்த விளையாட்டு வீரரும், பயிற்றுவிப்பாளருமாவார். இராணுவ கடற்படைப் பிரிவில் இரண்டாம் நிலை லெப்டினன்ட் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Sat, 07/18/2020 - 11:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை