மனோ இந்திய தூதுவரிடம் தொலைபேசியில் வாழ்த்து
மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்தியாவின் கரிசனை தொடர வேண்டுமெனபுதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லேயை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வாழ்த்தியதுடன் இந்த கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
இருவரது தொலைபேசி உரையாடலின் போதும்,
மலையக தோட்டப் புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும்.
பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை, 2015 க்கு பிறகு ஆரம்பித்து நடத்திய கட்சி என்ற முறையில், உங்களுக்கு இது தொடர்பான முழுமையான ஒத்துழைப்பை, தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் வழங்கும். அதேபோல், அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுகோலாக இருக்கின்ற மாகாணசபை மற்றும் 13ஆம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்திய கரிசனை தொடர வேண்டும்.
இலங்கை வந்த உடனேயே உங்களை தொடர்பு கொண்டு நான் உரையாடினேன். இப்போது அதிகாரபூர்வாக, இலங்கை ஜனாதிபதியிடம் உங்கள் பதவி ஆவணங்களை சமர்பித்ததையடுத்து, நீங்கள் பாரத நாட்டின் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாகவும் இந்நாட்டு மலையக மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன் என்றும் தொலைபேசி உரையாடலின்போது, மனோ கணேசன் கூறியுள்ளார்.
from tkn