அம்பாறையில் இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படும்

மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எச்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

இதனூடாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர் மற்றும் சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடு பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 17,3368 குடும்பங்களுக்கு 86 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்குரிய நிதியினை சமுர்த்தி வங்கிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் கொடுப்பனவுகள் யாவும் இம்மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் சிறந்த முறையில் சமுர்த்தி வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

இதற்கமைவாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் யாவும்  கொடுப்பனவுகளை வழங்கும் கால அட்டவணையை தயாரித்து மாவட்ட சமுர்த்தி காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளன.

இதனடிப்படையில் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுக்கு குறிப்பிட்ட தினங்களில் பணத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவிரும்புவோர் மாவட்ட செயலக சமுர்த்தி கண்காணிப்பு  உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.ஹனிபாவின் 0777004761 இலக்கமுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமுர்த்தி மூலமான 5000 ரூபா முதலாம் கட்ட கொடுப்பனவானது அம்பாறை மாவட்டத்தில் சிறப்பான முறையில் குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாச்சிக்குடா விஷேட நிருபர் 

Mon, 05/18/2020 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை