அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வேண்டுகோள்

எதிர்வரும் வாரம் மிகுந்த அவதானம் மிக்க காலமாக இருப்பதனால், அரசாங்கம் மற்றும்  சுகாதாரத்துறையினர் விடுக்கும் அறிவுறுத்தல்களை கூடிய கரிசனையுடன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென,  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதேச செயலாளர்களுடனான நேரடி காணொளி மூலமான விசேட கலந்துரையாடலை மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று (03) மேற்கொண்டிருந்தார்.  

இதன்போது, பிரதேச செயலக ரீதியாக ஊரடங்குச் சட்டம் நிலவுகின்றபோதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பிரதேசங்களில் மக்கள் பொறுப்பற்ற தன்மையோடு வெளியில் வந்து நடமாடுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இச்செயற்பாடு இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆரோக்கியமாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில்  திருகோணமலை மாவட்டம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றது. இவ்வாறு பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பு அவசியமாகும்.

அத்துடன் கடமைகளை நிறைவேற்றும்போது தமது பாதுகாப்பையும் தம் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தத்தம் பிரிவுகளில் மக்களுக்கு அவசியமான உணவுப்பொருள் இருப்பை பேண உரிய பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வர்த்ததகர்களுக்கு அறிவுறுத்துமாறும்அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வாகன அனுமதிப்பத்திரங்களை மக்களுக்கு வழங்குமாறும் பிரதேச செயலாளர்களை  அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு வழங்கப்படும் அத்தியாவசிய வாகன அனுமதிப்பத்திரங்களை முறை தவறி உபயோகிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அரசாங்க அதிபர்கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம்  அமுல்படுத்தப்பட்ட வேளையில், பிரதேச செயலக ரீதியாக நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விற்பனை வீடுகள் நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் விவசாய, மீன்பிடி நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கொடுப்பனவுகள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

(ஹஸ்பர்ஏ. ஹலீம்)

Sat, 04/04/2020 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை