பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை

வவுனியா நகர சபை அறிவிப்பு

வவுனியா நகரில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் மாவட்ட அழகக சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன் சில அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளோம்.

குறிப்பாக உணவகங்கள் சுகாதார விடயங்களை கையாளுவது மிகவும் முக்கியம். உணவருந்த வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணும்நிலை தொடர்பாக அனைத்து உணவகங்களும் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் நகருக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்துகொண்டு யன்னல் வழியாக எச்சில் துப்புபவர்கள் மீது கவனம் செலுத்தவுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளாலும் கொரோனோ வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இவ்விடயங்கள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள நகரசபையின் மாதாந்த அமர்வில் ஏனைய உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

வவுனியா நிருபர்

Thu, 04/23/2020 - 14:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை