வடக்கில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட பளை பிரதேச மக்களை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலைமை காணப்படுவதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட நீதி மன்ற வழக்கிற்கு அரச திணைக்கள தேவைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு அல்லாத பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள என பளையிலிருந்து கிளிநொச்சி நகருக்கு செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு வருகின்ற பொதுமக்களை ஆனையிறவில் படையினர் செல்லவிடாது திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பளை பிரதேசம் சிவில் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள்ளும் இராணுவத்தின் நிர்வாக எல்லை ரீதியாக யாழ்ப்பாணத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக தாம் கிளிநொச்சிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் தாம் யாழ்ப்பாணத்திற்கும் செல்ல முடியாது எழுதுமட்டுவாழ் பகுதியிலும் மறுபுறம் மருதங்கேணியிலும் தடை போடப்பட்டுள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளதாக அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர்
from tkn