'கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் கூட இல்லாத சூழல் உருவாகியுள்ளது' என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஆசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 'கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வீழ்ச்சியை தெற்காசிய பொருளாதாரம் சந்திக்கும்' என உலக வங்கி எச்சரித்தது. இந்நிலையில் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா பாதிப்பால் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தொழிற்சாலைகளும் பல்வேறு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலை நீடிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு வாய்ப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் கூட இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
ஆசியாவில் செலவினம் தொடர்பான கட்டுப்பாடு கொள்கைகளை அனைத்து நாடுகளும் கலந்தாலோசித்து சிறப்பாகச் செயல்படுத்தினால் மட்டுமே 2021ம் ஆண்டில் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 'கொரோனா வைரஸ் தொற்று ஆசிய நாடுகளில் தற்போது தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. சீனாவிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வீசுத் துவங்கியிருக்கிறது. இதனால் 2021ல் ஆசிய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது' என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
from tkn