மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் சம்பியன்

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 13ஆவது ஆண்டு நிறைவையொட்டி இரண்டாவது தடவையாக சிவசக்தி விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை(7)பிற்பகல் 2.30 மணியளவில் சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி மனோஜ் தலைமையில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ரி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது கடந்த இருவாரங்களாக துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டு வந்தது.இதில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 50விளையாட்டு கழங்களின் அணிகள் பங்குபற்றின. இறுதிச்சுற்றுப் போட்டிக்கு மண்டூர் அருள்மணி விளையாட்டுக் கழகமும்,கோட்டைக்கல்லாறு சுவாட்டி விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கோட்டைக்கல்லாறு சுவாட்டி விளையாட்டுக்கழகத்தினர் 20 ஓவருக்கு 138 ஓட்டங்களை குவித்தார்கள்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகத்தினர் 18 ஓவர் 3 பந்துகளுக்கு(18.3)143 ஓட்டங்களை குவித்து ரி20 சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டார்கள்.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனும்,கெளரவ அதிதியாக ஓய்வுநிலை திருமதி.மகேஸ்வரி கோபாலபிள்ளையும், விஷேட அதிதிகளாக இராமச்சந்திரன் அனோஜன், இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன் மற்றும் விளையாட்டுக்கழக செயலாளர்,பொருளாளர், உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற மண்டூர் விளையாட்டுக்கழகத்திற்கான சம்பியன் கிண்ணத்தையும்,ரூபா 20,000 காசோலையையும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணாக்கியன் வழங்கிவைத்தார்.இறுதி சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய கோட்டைக்கல்லாறு சுவாட்டி விளையாட்டுக்கழகத்திற்கு ரூபா 10,000 பெறுமதியான காசோலையும்,கிண்ணமும் வழங்கப்பட்டது.

இச்சுற்றுப்போட்டியில் தொடர் ஆட்டநாயகனாக பூ.விஜயராஜாவும்,சிறந்த பந்து வீச்சாளராக சி.அரவிந்தும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை