தேர்தலுக்கு முன்னர் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும்

பாரிய பிரசார கூட்டங்கள் நடத்தப்படாது

பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நோய் பரவும் வரை காத்திருக்காது ஆரம்ப முதலே தேவையான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளதாக கூறிய அவர், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்றால் இந்த நிலைமை தேர்தலுக்கு முன்னர் கட்டுப்பாட்டிற்கு வரும் என நம்புவதாகவும் அவர் கூறினார். தேர்தல் பிரசார பணிகளின் போது பாரிய கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தவவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கொரோன தொற்றை கட்டுப்படுத்த காத்திரமான பணிகளை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.ஆனால் சில தரப்பினர் அரசியல் லாபத்திற்காக பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர்.இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.சிலர் வௌிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.

எமது நாட்டில் இது வரை எவரும் மரணிக்கவில்லை. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பொய்ப்பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும் கூறினார்.

தேர்தல் பிரசார பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டு நோய் தொற்று அதிகரிக்காதா? என இதன் போது வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், பாரிய கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது. வீடுவீடாக பிரசாரம் செய்வதும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பதும் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் ஏப்ரல் 25 இல் நடைபெற உள்ள போதும் அதற்கும் முன்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.14 நாள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் முறையாக இடம்பெற்றால் இதனை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார தரப்பு அறிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை