அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது

அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியை லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இது நிரூபிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது.

ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. எனினும் இந்நிலைமைகள் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் மாறிவிட்டது.

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேல் தீர்மானிக்கும் சக்தியாக திகழப்போவதில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தல் இதை நிரூபித்துள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இது நிரூபிக்கப்படும். இந்த நாட்டின் அரசாங்கத்தை கையாளும் உரிமை ரவூப் ஹக்கீமுக்கு கிடையாது.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி 120 ஆசனங்களுக்கு மேல் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்கும். அந்த அரசாங்கம் அடுத்து ஐந்து வருட காலத்துக்கு ஆட்சியில் இருக்கும். அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முறியடிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை