மட். காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி புதன்கிழமை மாலை (05.02.2020) பாடசாலை மைதானத்தில் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் பி.சுகிதரனின் நெறிப்படுத்தலில், அதிபர் என்.சிவநேசராசா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர், அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது,

பாடசாலை மாணவர்கள் 3 இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. இவ்விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் மெய்வல்லுனர் போட்டிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் இளங்கோ இல்லம் 367 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், வள்ளுவர் இல்லம் 356 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், கம்பர் இல்லாம் 343 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பொற்றுக்கொண்டது.

இப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு, அதிதிகளின் உரைகளுடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இவ் விளையாட்டு போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வெல்லாவெளி பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், பட்டிருப்பு கல்வி வலய உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Sat, 02/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை