நெல்லின் விலைகள் வீழ்ச்சி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.இங்கு இம்முறை சுமார் இரண்டு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய நெல் உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் பங்களிப்புச் செய்யும் அம்பாறை மாவட்டத்தில், இம்முறை செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கைகள்,அண்மையில் பெய்த பெரும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கபிலநிறத்தத்தி,கழுத்தழுகல், பங்கசு நோய்கள் காரணமாகவும் நெற்செய்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.இந்நிலையிலேயே, அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை அறுவடைக் காலத்தை அண்மித்த நிலையில் உள்ளன.

ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூடைகள் நெல் கிடைத்து வருவதாகவும், நெல்லின் விலை நாளாந்தம் இம்மாவட்டத்தில் படிப்படியாக குறைவடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அறுவடையின் ஆரம்ப நாள்களில் 65.5 கிலோகிராம் எடையுள்ள நெல் மூடையொன்று 3,500 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டன.எனினும் தற்போது அம்பாறை மாவட்ட உள்ளூர் நெல் வியாபாரிகளின் செயற்பாடுகளால் நெல்லின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிடும் விவசாயிகள், தமது நெல்லை உத்தரவாத விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை