கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளைத் தலைவருமான பா. அரியநேத்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
1987ஆம் ஆண்டு,முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி,கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவுகூரும் வகையில்,இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையினர் இந்த நினைவுதின நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
இதில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபி முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கான அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)
from tkn