தமிழர் அபிலாஷைகளை தீர்க்க இந்தியாவின் அழுத்தம் அவசியம்

விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய சர்வதேசம் குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டும், இல்லையேல் தமிழ் மக்களை ஏமாற்றியதற்கான பொறுப்பு அவர்களையும் சாருமென கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பயணம் நீண்டது. இந்த மக்களின் அபிலாஷைகளை எல்லோராலும் பெற்றுக் கொடுக்க முடியாது. 

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன், அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு இடம்பெறச் செய்வேன் என கூறியிருந்தார்.

அது நடக்கவில்லை, போர் நிறைவடைந்த பின்னர் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு இந்த நாட்டில் இனங்கள் சமத்துவமாக வாழவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த நாட்டில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் என பரிந்துரை செய்தது.  

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தில் அதியுச்ச அதிகார பகிர்வின் அடிப்படையில் தீர்வுக்கு அரசாங்கம் இணங்கியிருக்கிறது. அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுக்களின்போது உதவிய நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும் அதிகாரப்பகிர்வு ஊடாக நாட்டில் சகல மக்களும் சமத்துவமாக வாழும் நிலை உருவாக்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றது. அதற்குமேல் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் சமஷ்டி குறித்து பேசியுள்ளனர்,  

அதியுச்ச அதிகாரப்பகிர்வு குறித்து பேசியுள்ளார்கள். அது நிறைவேற்றப்படவேண்டும். அது அவர்களுடைய கடமை. அதனை பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வாறு செயற்படுவதென்பது எமக்கு தெரியும். இதனை எல்லோரும் செய்ய முடியாது. குறிப்பாக கற்பனையில் வாழ்கிறவர்களும், தத்தளித்துக் கொண்டிருப்பவர்களும் செய்ய முடியாது.

புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியுடன் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய பிரதமரும் தமிழ் மக்கள் இலங்கையில் சம அந்தஸ்துடன் கௌரவமாக வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அது இந்தியாவின் விருப்பம் என தெளிவாக கூறியிருக்கின்றனர். அது செய்யப்படவேண்டும்.

புலிகளை அழிப்பதற்கு உதவும்போது சர்வதேசம் விசேடமாக இந்தியாவுக்கு இலங்கை வழங்கிய நிபந்தனை புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்பதே,  

அந்த நிபந்தனையிலிருந்து இப்போது மாறப் பார்க்கிறார்கள். அதனை சர்வதேசம் விசேடமாக இந்தியா பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பார்த்துக் கொண்டிருந்தால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டமைக்கான பொறுப்பு அவர்களுக்கும் உண்டு. நாம் எவருடனும் மோதவிரும்பவில்லை.

எவரையும் எதிர்க்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய தலைவர் கூறியதுபோல் சிங்கள மக்களின் அதிக விருப்பை பெறும் தலைவர்களுடன் நாம் நல்லுறவை கொண்டிருக்கவேண்டும் என்பதற்கமைய நாங்கள் நடந்து கொள்ள விரும்புகிறோம்.  

அதற்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாரில்லை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்    

Thu, 12/19/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை