வறுமை நிலையிலுள்ளோருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு

ஒரு இலட்சம் தொழில் வழங்க பல்துறை மேம்பாட்டு செயலணி

பல்துறை மேம்பாட்டு செயலணியை உருவாக்கி அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக ஒரு இலட்சம் பேரை நியமித்து அவர்களுக்கு ஆறுமாத காலம் பயிற்சியளித்து அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் இச் செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மிகவும் வறுமையானவர்களும் வறுமை நிலையிலுள்ள கல்வி அறிவு குறைந்தவர்களுமே இவ்வாறு அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுகையில்,

அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பல்நோக்கு மேம்பாட்டு செயலணியொன்றை அமைத்து அரசாங்க திணைக்களம் என்ற ரீதியில் அதன்மூலம் இணைத்துக்கொள்ள அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட  குழுவினர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் மற்றும் ஏனைய அனுசரணைகளின் அடிப்படையில் இவ்வாறான தொழில் வாய்ப்புகளுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை ஜனாதிபதியால் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் அரசியல் மற்றும் வேறு சக்திகளின் தலையீடுகளின்றி சுயாதீனமாக இணைத்துக்கொள்ளப்படுவர். வெளிப்படைத்தன்மையுடன் மாவட்ட மட்டத்தில் இவர்களை தெரிவுசெய்வதற்காக பல்துறை மேம்பாட்டு செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது.

போக்குவரத்துத் திணைக்களம், கல்வித் திணைக்களம், பெருந்தோட்டத்துறைசார் நிறுவனங்கள் என நாட்டில் காணப்படும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இவர்களுக்கு தொழில் வழங்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை