வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் : எல்.பி.பினான்ஸ் சம்பியன்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் (நொக் அவுட்) ஒருநாள் தொடரில் நேற்றுமுன்தினம் (5) நடைபெற்ற ஹெலீஸ் அணிக்கு எதிரான போட்டியில் எல்.பி. பினான்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.

கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற எல்.பி. பினான்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹெலீஸ் அணி லஹிரு குமார மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதன் காரணமாக அந்த அணி 27.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஹெலீஸ் அணி சார்பில், சச்சித்ர சேரசிங்க அதிகபட்சமாக 26 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு குமார 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், செஹான் ஜயசூரிய 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்.பி. பினான்ஸ் அணி வெறும் 16.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், லக்ஷான் ரொட்ரிகோ 33 ஓட்டங்கள் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள எல்.பி. பினான்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், மூன்று போட்டிகள் சமனிலையாகியுள்ளன. இதுவரையில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாத எல்.பி. பினான்ஸ் அணி வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக்கின் லீக் சம்பியனாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை