ஜ.தே. முன்னணிக்கு ஆணை வழங்குங்கள்

ஜனநாயகத்தை நிலைநாட்ட 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையாத ஜனநாயகப் போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான ஆணையை ஜனநாயக தேசிய முன்னணிக்கு மக்கள் வழங்க வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பதற்காக நீண்ட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.

ஜனநாயக தேசிய முன்னணியின் கொள்கை, தொனிப்பொருள், இலக்கு மற்றும் எதிர்பார்ப்பு குறித்து ஆழமாக கடந்த மூன்று, நான்கு மாதகாலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

சு.கவின் குழுவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திராக பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எமது கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளார். குறுகிய காலப்பகுதியில் அதிகளவான கட்சிகளும், சிவில் அமைப்புகளும் எம்முடன் கைக்கோர்த்துள்ளன. மாற்றுத் தரப்பு கூட்டணியொன்றை உருவாக்கியிருந்தது.

அக்கூட்டணிக்கும் எமது கூட்டணிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் கூட்டணியில் ஒரே கருத்தையுடையவர்களும் ராஜபக்ஷர்களின் குடும்ப ஆதிக்கத்தை செலுத்துபவர்களும் உள்ளனர். எமது கூட்டணியில் மாறுபட்ட கருத்துகளையுடைய பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் உள்ளன. எம் அனைவருக்கும் பொதுவான ஒரு இலக்கே உள்ளது. ஜனநாயகத்திற்காக போராடும் நபர்களே கைக்கோர்த்துள்ளனர். ஓர் இலக்கு ஆனால், பல்வேறு கருத்துடைய வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துத் தரப்பினரும் எம்முடன் கைக்கோர்த்துள்ளனர்.

ஜனநாயக தேசிய முன்னணியின் அனைத்து தலைமைகளினதும் இலக்கும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி 2015ஆம் ஆண்டு நாம் ஆரம்பித்த நிறைவடையாத ஜனநாயகப் போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசென்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவுசெய்வதாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை