ஒருமித்த நாட்டுக்குள் சுயாட்சியை பெற்றுக்கொள்ள சஜித்தே வேண்டும்

இனப் பிரச்சினை தொடர்பாக மிக நீண்ட பயணத்தில் மேற்கொண்டுவரும் நாம் அதற்கு தீர்வாக ஒருமித்த நாட்டுக்குள் சுயாட்சியை பெற வேண்டுமாக இருந்தால் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசும் போது உங்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று எம்மிடம் கேட்டார். அதற்கு நான் கூறினேன் உங்கள் தந்தையார் பிரேமதாச கூறினார் ஈழம் தரமாட்டோம் மற்ற எல்லாம் தருவோம் என. அதைத் தான் நாம் இப்போது கேட்கின்றோம். மற்ற எல்லாம் பெறுவோம் ஒருமித்த நாட்டிற்குள் கௌரவமான சுயாட்சி ஒன்றை பெறுவதானால் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அநியாயங்களை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஆட்சியில் இடம்பெற்ற யுத்தம், ஆட்கடத்தல், மனித உரிமை மீறல் போன்றவற்றினால், ஒவ்வொரு தமிழ்

குடும்பத்தினரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தத்தை நடத்தி பல அப்பாவி தமிழ் மக்களை திட்டமிட்டு கொன்று குவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தான் தற்போது இன்னுமோரு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவரை தமிழ் மக்கள் நேரடியாக புறக்கணிக்க வேண்டும். அவரை தோல்வியடைய செய்ய வேண்டுமானால் சஜித் பிரேமதாஸ போட்டியிடும் அன்னம் சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை இட்டு சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மேலும் தமிழ் மக்களினை காட்டிக் கொடுத்து ஆயுத்தக் குழுக்களாகவும் ஒட்டுக் குழுக்களாகவும் செயற்பட்டு பல அப்பாவி தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து காணாமல் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் புத்திஜீவிகளையும் ஊடகவியலாளர்களையும் கொலை செய்தவர்கள் மீண்டும் அது போன்ற நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு வைத்துள்ளார்கள்.

இவர்கள் இலட்சக்கணக்கான வாக்குகளை பெற்றுத் தருவதாக இவர்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என நாடகம் ஆடிக் கொண்டுள்ளார்கள்.

எனவே இவர்களுக்கு பாடம் புகட்ட எம்மிடம் இருக்கும் ஒரே ஜனாநாயக ஆயுதமான வாக்குரிமையை பயன்படுத்தி அவர்களின் முகத்திறையை கிளிக்க வேண்டும் என்றார்.

 

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை