தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம்

மலையகத்தில் பல்கலைக்கழகம் கட்டுவேன் கோட்டாபய ராஜபக்‌ஷ கொட்டகலையில் உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என தமிழ் மொழியில் உறுதி தெரிவித்த பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் எனது அரசாங்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுப்பேன் எனவும் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நேற்று (12) கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் அதிகுறைந்த வருமானத்தை பெற்று வாழ்வாதார சுமையுடன் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை

மேம்படுத்தும் வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் நான் முன்னெடுப்பேன். தோட்டத் தொழிலாளர்களின் தேவைப்பாடுகள் குறித்து உங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், அதில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய பொதுஜன பெரமுனவிற்கு அவருடைய ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நான் தருவேன்.

நாட்டில் குறைந்த வருமானத்தை பெறுவோர் சமுர்த்தி உதவி தொகைகள் கிடைக்கப்பெற்றோர் மற்றும் கிடைக்கப்பெறாதோர் போன்றவர்களுக்கும் நோய்களை அனுபவித்து வரும் வறியவர்களுக்கும் மாதம் மாதம் பருப்பு, நெத்தலி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் பொதிகளாகவும் இலவசமாகவும் வழங்குவேன். பல்கலைகழக கல்வியை மேற்கொள்ள ஆசைப்படும் மலையக கல்வி சமூகத்தினரின் கல்வியை விருத்தி செய்வதுடன் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து உயர் கல்வி கற்கும் வசதிகளை எனது அரசாங்கத்தில் செய்து கொடுப்பேன். அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்கலைக்கழக கல்வியை தொடரும் மாணவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மலையகத்தில் பல்கலைக் கழகங்களை உருவாக்குவேன்.

நான் என்றும் உங்களுடன் என தெரிவித்த அவர், ஆறுமுகன் தொண்டமானை விசுவாசிக்கும் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்யுங்கள் நான் செய்வதை சொல்லுகின்றேன். சொன்னதை செய்வேன்.

தேயிலைத்துறை அபிவிருத்தி அடையும் பட்சத்தில் தொழிலாளர்களை வறுமையில் இருந்து மீட்க முடியும். அதேநேரத்தில் இலங்கையில் தேயிலைக்கு வெளிநாடுகளில் சிறப்பான விலையும் அதற்கான கேள்வியையும் உயர்த்தி தேயிலைக்கு உயர்வான விலையை பெற்றுக்கொடுப்பேன். தேயிலை தொழிலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வருவேன் எனவும் நீண்ட காலமாக பழைய முறையிலான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு என்னுடைய 5 வருட ஆட்சியில் புதிய வீடுகளை அமைத்து கொடுப்பேன்.

மலையக பிரதேசங்களை உல்லாச பயண பிரதேசங்களாக அபிவிருத்தி செய்வதுடன் வெளிநாடு உல்லாச பயணிகளை பெரும்மளவு வரவழைக்கும் பட்சத்தில் அதனூடாக மலையக பிரதேச பிள்ளைகளின் வருமானத்தையும் உயர்த்துவதுடன் தாம் கற்ற கல்வியின் அடிப்படையில் அரசாங்க உத்தியோகங்களையும் வழங்குவதற்கு நான் உறுதி கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹற்றன் விசேட நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை