ஒன்பது பேர் உயிரிழப்பு
சனநெரிசல் மிக்க உக்ரைனிய உணவு விடுதி ஒன்றில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து உக்ரைனிய கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிராமடோஸ்க் நகரில் இருக்கும் இந்த உணவு விடுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த உணவு விடுதியில் கடந்த செவ்வாய் இரவு எட்டு மணி அளவில் அனைவரும் உணவு உட்கொண்டிருந்தபோது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“அங்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் இருந்தார்கள். சிறுவர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்று அங்கு நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்த யெவ்கென் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
“நாம் அங்கிருந்து சற்று முன்னரே வெளியேறினோம். ஆனால் நண்பர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் எஸ்–300 ஏவுகணை மூலமே ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஏவுகணை கிராமடோஸ்க் நகரின் விளிம்பில் இருக்கும் கிராமம் ஒன்றில் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
கிராமடோஸ்க் நகர் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் அது ரஷ்யா கைப்பற்றி பகுதிக்கு மிக நெருக்கமாக உள்ளது.
from tkn