சமூகத்தை பாதுகாக்க வேண்டுமானால் சஜித்தை வெற்றிபெற செய்யவேண்டும்

இராஜாங்க  அமைச்சர் அமீர் அலி

எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஒன்றிணைந்து சஜித் பிேரமதாசவை வெற்றி பெற வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) இரவு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

எதிர்காலத்தில் இந்த சமூகம் நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற முனைப்புக்கு கல்குடா தொகுதியில் இருக்கின்ற அனைத்து இளைஞர்களும் இந்த போராட்டத்தில் கை கோர்க்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டிலே இருக்கின்ற முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்களை பாதுகாத்துக் கொள்கின்ற தேர்தல். இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை சமுகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை வருகின்ற பொழுது அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இராஜினாமா செய்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்த நாங்கள் சொல்கிறோம் வருகின்ற தேர்தலில் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்கு அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

மியன்மார் போன்று நாங்கள் ஆக்கப்பட்டு விடுவோமா எங்களது பள்ளிவாசல்கள், சொத்துக்கள், இருப்புக்கள் அபகரிக்கப்பட்டு விடுமோ என்று யோசிக்கின்ற அளவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என சொல்லும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அளிக்கின்ற வாக்குகள் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அளிக்கப்படுகின்ற வாக்குகளாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் எதிர்தரப்பினருடைய சதிவலைக்குள் சிக்காமல் எமது சமூகத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் விழிப்பாக இருந்து ஜனாதிபதி தேர்தலில் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கல்குடா தினகரன் நிருபர்

 

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை