எக்குவடோரியல் கினியா துணை ஜனாதிபதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 25 ஆடம்பரக் கார்கள் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிறன்று நடந்த இந்த ஏலத்தின்மூலம் கிட்டத்தட்ட 27 மில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் (27 மில்லியன் டொலர்) வசூலிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த லம்போர்கினி வெனேனோ ரோட்ஸ்டர், 8.28 மில்லியன் பிராங்க்ஸுக்கு விற்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் இதுவே மிக அரிது என்று ஏலத்தைத் திறந்துவைத்த போன்ஹம்ஸ் மோட்டோரிங் டிபார்ட்மண்ட் குழுமத்தின் தலைவர் ஜேம்ஸ் நைட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காரை வாங்கியவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏலச் சுத்தியல் அடிக்கப்பட்டு விற்பனை உறுதிசெய்யப்பட்டபோது ஏல அரங்கில் கரவொலி நிரம்பியது.
வசூலிக்கப்பட்ட பணம் நன்கொடை அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று நைட் கூறினார்.
எக்குவடோரியல் கினிய துணை ஜனாதிபதி டியோடொரோ குவேமா ஓபியாங், அந்நாட்டு ஜனாதிபதி டியோரோ ஓபியாங் குவேமா பசோகோவின் மகனாவார். அவரது நிர்வாகம், உலகின் மிக ஊழல்மிகுந்ததென்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
from tkn