ஆயுதங்களின் சிதைவுகளை ஈரானுக்கு எதிரான ஆதாரமாக வெளியிட்ட சவூதி

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் நிலைகள் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஈரானின் தொடர்புக்கு ஆதாரமாக அந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை சவூதி பாதுகாப்பு அமைச்சு காண்பித்துள்ளது.

18 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏழு க்ரூஸ் ஏவுகணைகள் யெமன் இந்த தாக்குதலுக்கு தொடர்பில்லாத திசையில் இருந்து வந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எண்ணெய் நிலைகள் மீதான இந்த தாக்குதலுக்கு பெறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த தாக்குதலில் தங்களின் பங்கு எதுவுமில்லை என்று கூறியுள்ள ஈரான், எந்தவித இராணுவ நடவடிக்கையையும் சமாளிக்க தாங்கள் எதிர்தாக்குதல் நடத்த தயார் என எச்சரித்துள்ளது. ரியாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்த சவூதி பாதுக்காப்புத்துறை செய்தி தொடர்பாளர், துர்க்கி அல் மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.

சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை வெளியீடு, மிகவும் மோசமடைந்த நிலையிலுள்ள கருவிகளின் சிதறல்கள் “சந்தேகத்துக்கு இடமின்றி ஈரானின் ஆதரவுடன் நடந்துள்ளது என்பதை காட்டுகிறது” என்று கூறியுள்ளது. ஆனால், எந்த இடத்தில் இருந்து இந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்ற தகவல்களை தர இயலாது என்று சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

700 கி.மீ தூரம் பாயக்கூடிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் யெமனில் இருந்து அவை ஏவப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று அல் மால்கி தெரிவித்தார்.

இருப்பினும், பத்திரிகையாளர்கள் கேட்டபோது அல் மால்கி ஈரானை நேரடியாக குற்றம் சாட்டவில்லை. “குற்றவாளிகள்” உறுதியாக அடையாளம் காணப்பட்டவுடன் அது குறித்து வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹெசமோடின் ஆஷ்னா தனது ட்விட்டரில், “ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டன அல்லது ஏவப்பட்டன என்பது பற்றி சவூதி அரேபியாவுக்கு எதுவும் தெரியாது என்பதை பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்தது, மேலும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு அவற்றை ஏன் தடுக்கத் தவறியது என்பதை விளக்கத் தவறிவிட்டது என கூறி உள்ளார்.

சவூதி அரேபிய எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்க, தனது நாட்டின் தொடர்புடைய அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தப் பிரச்சினை தொடர்பான வியூகத்தை சமாளிக்க சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரான முகமது பின் சல்மானை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ சவூதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

முன்னதாக, சவூதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது.

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார்.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை