அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி டச்சுக் கோட்டை அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி பற்றி அறிவதற்காக நேற்று (20) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
தமிழரின் பாரம்பரிய பரதநாட்டியம், முஸ்லிம்களின் பாரம்பரிய ரபான் அடித்தல் மற்றும் பறங்கியரின் கபறிஞ்சா நாட்டியம் என்பனவற்றால் டச்சுக் கோட்டையின் நுழைவாயிலில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு டச்சுக் கோட்டை அபிவிருத்தித் திட்டம் மற்றும் மட்டக்களப்பில் சுற்றுலா அபிவிருத்தி சம்பந்தமான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டங்கள் யாவும் திறன் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து அவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் திறன்களை உள்வாங்கிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவின் உதவிச் செயலாளர் லச்சின் ஸ்ரெஹான், அபிவிருத்தி உதவி வளவாளர் கலாநிதி தோமஸ் டேவிஸ் மற்றும் குழுவின் தலைவர் டேவட் அப்லட், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் எம். புண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறைசார் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு விசேட நிருபர்
from tkn