மன்னார் மாவட்டத்தில் கடும் வரட்சி

18 ஆயிரத்து 704 குடும்பங்கள் நேரடி பாதிப்பு

நாட்டில் பல பாகங்களில் கன மழை பெய்து வருகின்ற பொழுதும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் வரட்சி காலநிலை நிலவுகிறது. இதனால் மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டு நிலப் பயிர் செய்கைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு சில வாரங்களாக மன்னார் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதும் மழை சிறிய அளவு கூட கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடும் வரட்சி நிலவி வருகின்றமையால் கிணற்று நீரும் வற்றியுள்ளது. குறிப்பாக நானாட்டான், மாந்தை, மடுப் பிரதேச விவசாயிகளின் வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் இறுதி அறிக்கையின் படி இவ் வரட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18 ஆயிரத்து 704 குடும்பங்களைச் சார்ந்த 63 ஆயிரத்து115 பேர் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் மடு, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளே குடிநீர் பிரச்சினைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மடு பிரதேச செயலகப் பிரிவில் 4,099 குடும்பங்களும், முசலிப் பிரதேசத்தில் 3,723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சினைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் குடிநீர் வழங்குவதற்காக எட்டு மில்லியன் ரூபா நிதி அரசிடம்

கோரியிருக்கின்ற போதும் இதுவரை இரண்டு மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் ஏனைய நிதிகள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

மன்னார் குறூப் நிருபர்

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை