கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க விரைவில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற அரசியல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆதரவு கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் இக்கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துவைத்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுகள் நடத்தவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது. 58 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று 38 சதவீதமாக குறைந்துள்ளனர். இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மை நிலையிலிருந்து தள்ளப்படும் அபாயமுள்ளது. இது இனவாத போக்கல்ல. தமிழர்களின் இருப்பை தக்க வைப்பதற்கான அரசியல் நகர்வு.
பொருளாதாரம், கலாசாரம், நிலம், அரசியல் என அனைத்திலும் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டியுள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால், வைத்தியசாலை அவசர மருத்துவ பராமரிப்பு பிரிவில் உள்ளவர்கள் போன்றுதான் இன்று கிழக்கில் தமிழர்கள் உள்ளனர்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn