ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சித்தால் மு.கா நீதிமன்றம் செல்லும்

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லுமென மு.கா செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் திரைமறைவில் முயற்சிப்பதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இது விடயமாக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேசவில்லை. ஆனால் எமது நிலைப்பாடு தொடர்பில் எம்முடன் பேசாத நிலையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுமாயின் அதனை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும்.

ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆகிய மூவருக்கும் அடுத்த ஜனாதிபதிப் பதவியில் அமர்வதற்கு வாய்ப்பில்லை என்பதனால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர்களுக்குள் உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உறுதி செய்யப்படலாம். அவ்வாறாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இதனைச் செய்வதற்கு அரசாங்கம் முற்படலாம்.

அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கின்ற வழிமுறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படும். குறிப்பாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாமல் தாமதமடைந்து செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அக்காலம் முழுக்க சமகால ஜனாதிபதி பதவியில் நீடித்திருப்பார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகையினால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை குறுகிய காலத்தினுள் எதிர்நோக்கியிருக்கின்ற இந்த சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின் உச்ச நீதிமன்றத்தில் இதனை சவாலுக்குட்படுத்துவோம் என்றும் நிஸாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டார்.

கல்முனை விசேட நிருபர்

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை