மட்டு. வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் பொது நியமங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்

மட்டக்களப்பில் நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் பொது நியமங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்படுவதுடன், வர்த்தமானியில் கூறியவாறு பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் 18ஆம் திகதிஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்காக ஒரு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன், அந்த அடிப்படையில் நியமங்கள் அல்லது பிரமாணங்களுக்கு அமைவாக இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற வேண்டும்.

ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை தெரிவுசெய்வதாக இருந்தால் நிச்சயமாக இலங்கை கல்வி நிருவாக சேவை என்கின்ற விடயம் முக்கியமாக அமைந்திருக்கின்றது.

இலங்கை கல்வி நிருவாக சேவையில் இரு வகையான ஆளணிகள் காணப்படுகின்றார்கள். அதில் ஒரு வகை பொது ஆளணி மற்றயது விஷேட ஆளணி ஆகும். அந்த அடிப்படையில் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளராக தெரிவுசெய்யப்படுகின்றவர் நிச்சயமாக பொது ஆளணி 1ம் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் 1ம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்காதவிடத்து, இலங்கை கல்வி நிருவாக சேவை 2ம் வகுப்பிலுள்ள பொது ஆளணியினரை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறனவர்களும் விண்ணப்பிக்காதவிடத்து இலங்கை கல்வி நிருவாக சேவை 3ம் வகுப்பினரை தெரிவு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. இதுதான் 2015ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயம்.

அடுத்தது விசேட ஆளணியினர், இவர்கள் இலங்கை கல்வி நிருவாக சேவை 2ம், 3ம் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பாடவாரியாக நியமிக்கப்படுகின்றவர்களாகவுள்ளனர். அந்த அடிப்படையில் இவர்கள் பாடங்களை மேற்பார்வை செய்கின்ற பணியினை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது கிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நிரந்தரமாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விடயத்தினை கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு போன்றோரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவருகின்றேன் எனவும் தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை