பலளுவெவ ரொலெக்ஸ் அணி ஜீ.எஸ்.எஸ்.சி லீக் கிரிக்கெட் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது

கனேவல்பொல ஜீ.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் 32 கிரிக்கெட் அணிகளை இணைத்து நடத்திய மென்பந்து லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தையும் அதற்கான வெற்றி பரிசு தொகையான 50 ஆயிரம் ரூபாவையும் தட்டிச்சென்றது. அத்துடன் இரண்டாம் இடத்தை யூ.பீ.சுப்பர் கிங்ஸ் அணி தட்டிச் சென்றது.

இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இப்பிரதேசத்திலுள்ள பிரபல கிரிக்கெட் அணிகள் 32 கலந்து கொண்டதுடன், ஐந்து நாட்கள் போட்டிகள் இடம்பெற்று இறுதிப் போட்டி இம் மாதம் 15 ஆம் திகதி கனேவல்பொல பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் போட்டியிட பலளுவெவ ரொலெக்ஸ் அணியும், யூ.பீ்.சுப்பர் கிங்ஸ் அணியும் தகுதி பெற்றது. அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பலளுவெவ ரொலெக்ஸ் அணி நான்கு ஓவர்களில் இரு விக்கெட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூ.பீ.சுப்பர் கிங்ஸ் அணி நான்கு ஓவர்களில் 24 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனடிப்படையில் பலளுவெவ ரொலெக்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தொடரின் சிறப்பாட்ட வீரராக யூ.பீ.சுப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சாஜீத் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த துடுப்பாட்டக்காரர் விருதுக்கு பலளுவெவ ரொலெக்ஸ் அணியைச் சேர்ந்த பஸாஹிர் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக கனேவல்பொல ராஹத் மோட்டார்ஸ் அணி ரிப்கான் தெரிவு செய்யப்பட்டார்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை