சஜித்தை வேட்பாளராக நியமிக்குமாறு கோரி திருமலை காளி கோயிலுக்கு முன்னால் வழிபாடு

சஜித் பிரேமதாஸாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி திருகோணமலை காளிக் கோயிலுக்கு முன்னால் மத வழிபாட்டில் பிரதேச மக்கள் நேற்று (26) ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் திருகோணமலை காளிக் கோயிலுக்கு முன்னால் ஒன்றுகூடி நூற்றி ஒரு தேங்காய்களை உடைத்து மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக வந்து தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் எனவும், அனைத்து மக்களுக்கும் சகவாழ்வு வழங்க வேண்டும் எனவும் கோரியே இந்த மத வழிபாட்டில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியில் எவ்வித பாகுபாடுமின்றி கட்சி சென்றுகொண்டிருந்த வேளை இம்முறையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் எனக் கோரியே இந்த மத வழிபாடு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி ஆதரவாளர்கள் சத்தமிட்டு மலைக்கோயில் பகுதிக்கு வருகை தந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

ரொட்டவெவ குறூப், திருமலை மாவட்ட விசேட நிருபர்கள்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை