கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; புனர்வாழ்வளித்து விடுதலை

அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்போவதாக அமைச்சர் மனோ உறுதி

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கிழோ அல்லது புனர்வாழ்வு அளித்தோ விடுதலை செய்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், கைதிகளிடம் நேற்று நேரடியாக உறுதியளித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல்செய்து கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்ைக எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 9 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் முன்னெடுத்த உண்ணா விரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் வகையில் அமைச்சர் நேற்று (23) கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

அமைச்சர் முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரி.எம்.ஜே. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசனின் உடல்நிலை தொடர்பில் மருத்துவ அறிக்கை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்குப் பிணை வழங்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்தார். திரைப்படக் கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான இவர் இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

தனக்கான வழக்கு விசாரணையின்போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும் அதனால் போதுமான சாட்சியங்களை திரட்டமுடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசன் கூறியுள்ளார்.

தனக்குப் பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களைத் தன்னால் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான க.கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

நமது நிருபர்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை